சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Saturday, August 14, 2010

ஐந்தாம் முழக்கத்தின் அறிக்கை...

செந்தமிழ் முழக்கம் - 5   நாள்: 01/08/2010

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் ஐந்தாவது சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 01/08/2010  ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி 08.30 மணிக்கு முடிவுற்றது. விழாவுக்கு சுமார்  25 பேர் வருகை புரிந்திருந்தனர். விழாவுக்கு வருகை புரிந்திருந்த அனைவரையும் இவ் அமைப்பின் தலைவர் கவிஞர். தஞ்சை. ம. பீட்டர் வரவேற்றார்.

 இவ்வமைப்பின் நிறுவனர் பெரும்புலவர். முனைவர். சி.வெ. சுந்தரம் ஐயா அவர்கள், முன்னிலை வகிக்க வருகை புரிந்திருந்த  முனைவர். பெ. இலக்குமி நாராயணன் அவர்களையும்,  சிறப்புரை ஆற்ற வருகை புரிந்திருந்த  முனைவர்,  அ.மு. மாலதி அவர்களையும், சிறப்பாக பெங்களூருவில் இருந்து இவ்விழாவைக் கண்ணுற வந்திருந்த, இவ்வமைப்பின் செயல்பாடுகளை உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிற தஞ்சை. சீனிவாசன் அவர்களையும் முறையாக அறிமுகப்படுத்தினார். அத்துடன் உவமைகளுக்கான இலக்கணம், உவமைகள் அமைய வேண்டிய விதம் போன்றவற்றை எடுத்துக் கூறினார்.

விழாவிற்கு முன்னிலை வகித்த டி.ஜி. வைஷ்ணவா கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். பெ. இலக்குமி நாராயணன் அவர்கள் முன்னுரையாகத்  தொல்காப்பியத்திலும்  சங்க இலக்கியத்திலும்  அமைந்துள்ள அகப்பொருள் மேன்மைகளை எடுத்துக்காட்டி, அகச்செம்மையே மனிதனின் புறவாழ்வு செம்மையாக அமைய முக்கிய காரணம் என்று வலியுறுத்தினார். மேலும்  அற்றம் காக்கும் கருவியான கல்வியைப் பெறுவதில் நாட்டம் உடையவராக இருந்த பண்டையச் சான்றோர்களைக் காட்டி கல்வியின் அவசியத்தையும் எடுத்துக்கூறினார்.    

சான்றோர் தொடர்பு கவலைகளைத்  தீர்க்கும் என்பதற்குச் சான்றாக  வயது ஆகியும்  மூப்பின்றி தலை மயிர் ஒன்று கூட நரைக்காமல் தான் இருந்தமைக்குக்  காரணம் என்று  சங்கப்புலவன் பிசிராந்தையார் கூறிய காரணங்களுள் ஒன்றான ‘என் நாட்டில் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் இருப்பதால் நான் கவலையின்றி வாழ்கிறேன்..அதனால் எனக்குத் தலை மயிர் ஒன்று கூட நறைக்க வில்லை”  என்றுரைத்ததை எடுத்துக்காட்டினார்.

சிறப்புரை ஆற்ற வருகை புரிந்திருந்த சொற்பொழிவாளர்: திருவாசகத்தென்றல், பேராசிரியர், முனைவர்,   அ.மு. மாலதி அவர்கள் சங்க இலக்கியத்தில் உவமைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.சங்கச் சான்றோர்களால் கையாளப்பட்ட உவமைகள் பொதுவாக வாழ்வியலில் இடம்பிடித்து இருந்தவை. அதீத கற்பனை இல்லாதவை. அத்துடன் இயல்பாக அன்றாடம் நாம் காணும் பொருட்களின் மீது அமைபவை என்றுரைத்தார். 

பன்றிகள் படுத்து உற்ங்கிக் கொண்டு இருக்கின்றன. அவற்றின் மீது கொன்றை மலர்களின் மகரந்தப் பொடி சிந்தியுள்ளது. அது பார்ப்பதற்கு உரைகல்லின் மீது தங்கத்தின் துகள்கள் அப்பியிருப்பது போல காணப்படுகிறதாம் (அகநானூறு 148 பரணர்) போன்ற உவமைகளைச் சான்று காட்டி விளக்கினார். இது போல சுமார் 20 உவமைகளை விளக்கிக் காட்டினார்.  

மிக அக்கறையுடன்  உவமைகள் அமைந்த இலக்கியம், பாடல் எண் அனைத்தையும் குறிப்பெடுத்து வந்து விளக்கியமை பயனுள்ள வகையில் அமைந்திருந்தது. 

இச்சொற்பொழிவில் இருந்து ,  
1. பன்றி குறித்து அம்மையார் கூறிய உவமை  எந்த இலக்கியத்தில் அமைந்துள்ளது?
2. அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற பாடலைப் பாடிய புலவர் யார்?
3. கல்வி குறித்து பேராசிரியர் இலக்குமி நாராயணன் அவர்கள் சுட்டிக் காட்டிய திருக்குறள் எது?
ஆகிய மூன்று வினாக்கள் இவ்வமைப்பின் செயலாளர் ப. பானுமதி அவர்களால் எழுப்பப் பட்டது. 

சரியாகப் பதில் உரைத்த பள்ளி மாணவர் ஒருவருக்கு ஒரு சிற்றுண்டிப் பெட்டகமும், பெரியவர்கள் ஆறு பேருக்குப் புத்தகங்களும் பரிசளிக்கப்பட்டன. 

சொற்பொழிவின் இடையில் வந்திருந்த அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் வழங்கப்பட்டன.


இறுதியில் முறையான நன்றியுரை இவ்வமைப்பின் பொதுச்செயலாளர்
ப. பானுமதி அவர்களால் வழங்கப்பட்டது. அனைவரிடமும்  கையொப்பமும் தொலைபேசி எண்களும் பெற்றுக்கொண்ட பின்பு கூட்டம் இனிதே கலைந்தது.




- பொதுச்செயலாளர்.

 
 

3 comments:

  1. தங்களின் இலக்கியப் பணி வாழ்க!
    தங்களுக்கு மனமார்ந்தத நன்றிகள்!

    ReplyDelete
  2. தங்களின் பார்வைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி...

    அமைப்பின் மாதம் ஒரு முறை நடைபெறும் இலக்கிய கூட்டத்தில் தாங்களும் வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்...

    மிக்க நன்றி...

    ReplyDelete
  3. அன்புள்ள அண்ணாமலை,
    தங்களின் வருகைக்கும், எங்களுடன் இணைந்ததற்கும், அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி. சோலையின் வளர்ச்சிக்கு உதவிடும் தங்களின் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    - பொதுச்செயலாளர்.

    ReplyDelete